திருமலை: தெலங்கானா மாநில பொறுப்பு ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தெலங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக கவனிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, தெலங்கானா மாநில பொறுப்பு ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றார். ராஜ்பவனில் அவருக்கு தலைமை நீதிபதி லோக் ஆராதே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹரியானா கவர்னர் தத்தாத்ரேயா, மாநில உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும், முதல்வர் ரேவந்த் ரெட்டி, பொறுப்பு ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார்.