திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, 5வது மண்டலத்திற்கு உட்பட்ட தங்க சாலை தெரு, சவுகார்பேட்டை கொண்டித்தோப்பு ஆகிய பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.
அப்போது கொண்டித்தோப்பு பெத்தநாயக்கர் தெருவில் மாடுகள் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருந்தன. அவைகள் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததை தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அபராதம் செலுத்தினால் உரிமையாளரிடம் மாடுகள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.