பெரியபாளையம்: பெரியபாளையத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஊராட்சி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார்(40). இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
சுகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் மின்வாரிய ஊழியர்கள், அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.