டெல்லி: ரூ.2000 நோட்டுகளை ஆவணமின்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ. 2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எந்த ஒரு ஆவணமும் தேவை இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் அறிவித்தது. இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாய வழக்கு தொடர்ந்தார். ஆனால் ரூ.2,000 நோட்டு விவகாரம் என்பது அரசின் கொள்கை முடிவு, இதில் ஆய்வு செய்யக் கூடிய மேல்முறையீட்டு ஆணையம் அல்ல நீதிமன்றம் என கூறி அஸ்வினிகுமார் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி உ யர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எந்த ஆவணமும் பெறாமல் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறும் ஆர்பிஐ முடிவை எதிர்த்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடைவிடுமுறை முடிந்த பின் ஜூலை 3ல் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட அறிவுறுத்தியுள்ளது.