புதுடெல்லி; நாடு முழுவதும் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விஸ்தாராவில் பதிவு செய்த பயணிகள் அவதி அடைந்தனர். டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து செயல்படுத்தும் விஸ்தாரா நிறுவனத்தில் நேற்று 2ம் நாளாக 50க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. விமானங்களை இயக்க விமானிகள் இல்லாத காரணத்தினால் விஸ்தாரா நிறுவனம் இந்த நடவடிக்கை மேற்கொண்டது.
தினமும் 300க்கும் மேற்பட்ட விமானங்களை விஸ்தாரா நிறுவனம் இயக்கி வரும் நிலையில் 15 மூத்த விமானிகள் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த நிறுவனத்தில் சுமார் 800 விமானிகள் உள்ளனர். இதையடுத்து விஸ்தாரா நிறுவனத்தில் ரத்து செய்யப்படும் மற்றும் தாமதமாகும் விமானங்களின் தினசரி தகவல் மற்றும் விவரங்களை சமர்ப்பிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் விமானம் ரத்து மற்றும் தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது.