சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தின் மறைந்த மாமன்ற உறுப்பினர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை
மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (28.12.2023) வழங்கினார். சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆலப்பாக்கம் கு. சண்முகம் (தி.மு.க. – வார்டு 146 மாமன்ற உறுப்பினர் மற்றும் நிலைக்குழு (பொதுசுகாதாரம்) உறுப்பினர்), க. சரஸ்வதி (தி.மு.க – வார்டு – 59) ஆகியோர் மறைவினையொட்டி அவர்களது குடும்ப பாதுகாப்பு நிதியாக தலா ரூபாய் 3 லட்சத்திற்கான காசோலையினை அவர்களது குடும்பத்தினரிடம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமைச் செயலகத்தில் இன்று (28.12.2023) வழங்கினார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள உறுப்பினர்கள் மறைவிற்கு குடும்ப நிவாரண நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் வழங்கி வந்த நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பொறுப்பில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதி ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு மேயர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மறைந்த திரு.ஆலப்பாக்கம் கு. சண்முகம், க. சரஸ்வதி ஆகிய இரண்டு மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதிக்கான காசோலைகள் மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச்சேவை நிறுவன தலைவர் (ம) நிருவாக இயக்குநர் முனைவர் எஸ்.விஜயகுமார், நகராட்சி நிருவாக இயக்குநர், சு.சிவராசு, கூடுதல் ஆணையர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, துணை ஆணையர் (கல்வி), ஷரண்யா அறி, மாமன்ற செயலாளர் திரு.மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.