சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை ஆண்டுக்கு நான்கு தினங்கள் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் நாள், டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் நாள் ஆகிய நான்கு தினங்களில் நடத்த வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
இதன்படி, தமிழ்நாட்டின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், முதல் முறையாக, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள், ஏரியா சபை கூட்டங்கள் நடத்தப் பெற்றது. இந்நிலையில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள 1998ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திலும், 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் விதிகளிலும், மக்கள் தொகையின் அடிப்படையில், மாநகராட்சிகளில் ஒவ்வொரு வார்டையும் நான்கு முதல் பத்து பகுதிகளாகவும், நகராட்சிகளில் நான்கு பகுதிகளாகவும் மற்றும் பேரூராட்சிகளில் மூன்று பகுதிகளாகவும் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஏரியா சபைகளை அமைக்கவும் மற்றும் ஏரியா சபைகளின் கூட்டங்களை நடத்துவது தொடர்பாகவும் தேவையான வகைமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இவ்விதிகளின் 180வது விதியின்படி, ஏரியா சபைக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது, வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். இதன்படி முதலமைச்சர் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏரியா சபைகளின் கூட்டங்களை, ஆண்டுதோறும், தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் நாள், டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15ம் நாள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் நாள் ஆகிய நான்கு தினங்களில் நடத்திட வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்பட்டு வருவதைப் போன்று, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், ஏரியா சபைக் கூட்டங்கள், வருடத்திற்கு நான்கு முறை நிர்ணயிக்கப்பட்டுள்ள நாட்களில் நடத்தப்படவும், இக்கூட்டங்களில் பொது மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு தங்கள் பகுதியின் அடிப்படை வசதி தேவைகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத்தில் மக்கள் பங்கேற்பினை உறுதி செய்யவும், அடித்தட்டு ஜனநாயகத்தை வலுப்பெறச் செய்யவும் ஏதுவாகிறது.