சென்னை: கூட்டுறவு துறையில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 26 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் ஆணைகளை வழங்கினார்.
கூட்டுறவுத் துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி பெற்ற 26 நபர்களுக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணிகளின் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். அடிப்படையில் 26 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்பணியிடம் தொகுதி 4-இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பணியிடங்களாகும். இப்பணியிடத்திற்கான சம்பள விகிதம் நிலை-8 (ரூ.19,500-71,900) ஆகும்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசும் போது தெரிவித்ததாவது;
கூட்டுறவுத்துறையில் கடந்த காலங்களில் பணியாற்றி வந்த குடும்பங்களைச் சார்தோர் பணியில் இருந்த காலகட்டங்களில் அவர்கள் இயற்கை எய்தியிருந்தால் அந்த குடும்பத்திற்கான இழப்புகள், குடும்பத்தலைவர்களை இழந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்க நேரிடும் என்ற அடிப்படையில் தான் அரசின் சார்பில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கூட்டுறவுத்துறையில் கடந்த காலங்களில் பணிக்காலங்களில் இயற்கை எய்தியவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கின்ற வகையில் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணியினை வழங்குவது என முடிவெடுத்து அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் ஆலோசனையின்படி, இன்னும் சொல்லப்போனால் இந்த பணி ஆணையை கூட அவர்களுடைய தலைமையில், அவர்களுடைய கரங்களால் வழங்கப்பட இருந்தது. ஆனால், வெளிநாட்டுப் பயணம், நிதி நிலைக் கூட்டம், சட்டமன்ற தொடர் கூட்டம் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வராலாம் என்ற சூழ்நிலையில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் அந்தந்த துறைகளில் இருக்கக்கூடிய பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
அதன் அடிப்படையில், இன்று இந்த 26 குடுமங்களின் வாரிசுதாரர்களுக்கு அவர்களுடைய கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இன்று பணி ஆணைகளைப் பெறுகின்ற வாரிதாரர்கள், தங்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எப்படி இந்த துறையின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்து பாடுபட்டார்களோ, அதைப் போல நீங்களும் இந்த துறையின் வளர்ச்சிக்கும், அதே நேரத்தில் உங்களுடைய குடும்பத்தின் வளர்ச்சிக்கும் நல்லவர்களாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த நல்லநேரத்தில் உங்களை எல்லாம் அன்போடு வாழ்த்தி, உங்களுக்கெல்லாம் பணி நியமன ஆணைகளை வழங்க வாய்ப்பினை வழங்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். கே.கோபால், இ.ஆ.ப., அவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.