Monday, June 3, 2024
Home » குற்றவாளிகளை விடுதலை செய்ய மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடியை சுற்றிவளைத்து பிடித்த போலீசார்

குற்றவாளிகளை விடுதலை செய்ய மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் மாளிகையை நோக்கி பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடியை சுற்றிவளைத்து பிடித்த போலீசார்

by Karthik Yash

சென்னை: குற்றவாளிகளை விடுதலை செய்ய கவர்னர் மறுப்பதை எதிர்த்து கவர்னர் மாளிகை நோக்கி பிரபல ரவுடி குடிபோதையில் பெட்ரோல் குண்டு வீசினான். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் ரவுடியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கவர்னருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தமிழர்கள், தமிழக கலாசாரம், மொழி, இலக்கியம், வழிபாடு உள்ளிட்ட பிரச்னைகளை கவர்னர் ஆர்.என்.ரவி கிளப்பி வருகிறார்.

மேலும், தமிழக அரசு கொண்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கும் அவர் முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக நீட் பிரச்னைக்காக தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் குற்றச்சட்டு எழுந்தது. கூட்டுறவு சங்கங்களுக்கான பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் இருப்பது, முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க அனுமதிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் கவர்னர் மீது அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்.

ஆனால் தேவையில்லாமல், மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவை குறித்து கருத்துக்களை கூறி, மக்களை அவர் திசை திருப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் தமிழக கவர்னருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் கவர்னர் மாளிகை முன்பு பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதனால், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இரு வாயில்கள் முன்பும் பேரிகார்டு மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு போடப்பட்டுள்ள பகுதிகளை உயர் அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு கவர்னர் மாளிகை எதிரே சாலையின் நடைபாதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென கவர்னருக்கு எதிராக கோஷமிட்டபடி 2 பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். இதைப் பார்த்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது கையில் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அந்தக் குண்டுகள் சாலையின் நடுவில் உள்ள பேரிகார்டுகளில் பட்டு உடைந்து கீழே விழுந்தது. பின்னர். மேலும் 2 குண்டுகளை எடுத்து கவர்னர் மாளிகை நோக்கி வீச முயன்றார். இதனால் உஷாரான போலீசார், வெடிகுண்டு வீச முயன்றவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த இரு பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கேயே அழிக்கப்பட்டன.

பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் நந்தனத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்று தெரிந்தது. பிரபல சி வகை ரவுடியான வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே நீட் தொடர்பாக பல மாணவர்கள் உயிரிழந்ததைக் கண்டித்து, 2022 பிப்ரவரி 19ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள பாஜ மாநில தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டுகளை வீசியதாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் அவருக்காக ஜாமீன் மனு தாக்கல் செய்ய யாரும் முன் வரவில்லை.

இதனால் அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார். இரு நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று காலையில் அவர் நன்றாக குடித்து விட்டு நண்பர்களிடம் கவர்னருக்கு எதிராக பேசி வந்துள்ளார். மாலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலை 3 மணிக்கு ஒருவர் 4 பெட்ரோல் குண்டுகளுடன் கவர்னர் மாளிகை முன்பு வந்தார். கவர்னர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது, பணியில் இருந்த பாதுகாப்பு போலீசாரால் அவர் தடுக்கப்பட்டார். அப்போது அவர் எறிய முற்பட்ட 2 பாட்டில்கள் சாலையில் விழுந்தன. 2 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது பாஜ அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளன. கவர்னர் மாளிகை முன்பு பணியமர்த்தப்பட்ட பாதுகாப்பு காவலர்கள் விழிப்புடன் இருந்த காரணத்தினாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததாலும், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் வீச்சு தடுக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

You may also like

Leave a Comment

eleven − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi