ஊட்டி: ஊட்டியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக பூங்காக்கள் பசுமைக்கு மாறி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும். 2 மாதங்கள் இந்த மழை நீடிக்கும். பின், அக்டோபர் மாதம் துவங்கி 2 மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழையும் 2 மாதங்கள் நீடிக்கும். ஆனால், அதன் பின், மழை குறைந்து காணப்படும். நவம்பர் முதல் பனி பொழிவு காணப்படும். பகல் நேரங்களில் வெயில் காணப்படும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை செடிகள், வனங்கள் மற்றும் பூங்காக்கள் பசுமை இழந்து விடும்.
வனங்களில் ஆங்காங்கே காட்டு தீ ஏற்படும். தேயிலை செடிகள் காய்ந்து போய்விடும். பூங்காக்களில் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி தொழிலாளர்கள் பராமரிப்பது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்கிறது. இம்முறையும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மழை குறைந்த போதிலும் கடந்த மாதம் இறுதி வாரம் முதல் நீலகிரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது.
இதனால், காய்ந்து போய் காணப்பட்ட வனப்பகுதிகளில் தற்போது பசுமை திரும்ப துவங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகியவை பச்சை பசேல் என காட்சிளிக்கிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. மலர் செடிகள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், தேயிலை செடிகளும் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. ஓரிரு நாட்கள் இதேபோன்று மழை பெய்தால், வனங்களிலும் பசுமை திரும்பிவிடும்.