Thursday, May 9, 2024
Home » தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நெல்லையில் 2 கடைகள் மூடல்: உரிமம் அதிரடியாக ரத்து

தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை நெல்லையில் 2 கடைகள் மூடல்: உரிமம் அதிரடியாக ரத்து

by Lakshmipathi

*உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை : நெல்லை மாநகரத்தில் தொடர்ந்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரண்டு கடைகளின் உரிமம், பதிவுச் சான்று ஆகியவை ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டது. கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.தமிழ்நாடு முழுவதும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய, காவல்
துறையும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து, அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் முறையாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை மூலம் ரூ.5,000, இரண்டாவது முறையாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் குற்றம் புரிபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், மூன்றாவது முறை புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் குற்றம் புரிபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், தொடர்ந்து அக்கடையின் உரிமம், பதிவுசான்று ரத்து செய்வது, கடையை மூடுவது ஆகிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்தில் பாளை. தியாகராஜநகரிலுள்ள ஒரு ஷாப்பிங் கடையில் தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டதால், அந்தக் கடையின் பதிவுச் சான்று ரத்து செய்யப்பட்டு, கடை உடனடியாக பூட்டப்பட்டது. அக்கடையின் உரிமையாளரான சந்தனகுமாரி என்பவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று பர்கிட்மாநகரத்தில் அருள்ராஜ் என்பவர் கடையில் இரண்டாவது முறையாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டதால், தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜன் அறிக்கையின் பேரில், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பாளை. வி.எம்.சத்திரம் ஜான்சிராணி நகரிலுள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வ.உ.சி.மைதானம் அருகில், திருவனந்தபுரம் ரோட்டில் பாருக்மீரான் என்பவர் நடத்தி வரும் ஸ்டோர்சில் தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, பாளை. காவல் நிலைய போலீசார் கொடுத்த அறிக்கையின் பேரில், அக்கடை உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் முன்னிலையில் மூடப்பட்டது. மேலும் இது போன்ற சோதனைகள் அதிகளவில் இனிமேல் நடைபெறவுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi