பரமத்திவேலூர்: பரமத்தியில் அடுத்தடுத்து உள்ள மளிகை கடை, செல்போன் கடையில் மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து ரூ.1.30 லட்சம், 20க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி-திருச்செங்கோடு சாலையில் உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். சுப்பிரமணி மளிகை கடையில் நேற்று இரவு 10 மணி வரை வியாபாரம் செய்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுதாகரன் செல்போன் கடையை திறக்கவில்லை. இந்நிலையில், சுப்பிரமணி இன்று காலை 6 மணிக்கு மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த பணம் வைக்கும் டேபிள் உடைக்கப்பட்டு கிடந்தது. மளிகை கடையில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதேபோல், அருகில் உள்ள சுதாகரன் செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அவரது கடையில் இருந்த ரூ.55 ஆயிரம் மற்றும் 20க்கும் மேற்பட்ட செல்போன்களும் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள் வந்து சோதனை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.