லக்னோ: ‘மக்களவை தேர்தலில் பாஜ 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று விட்டால், அரசியலமைப்பை மாற்றுவதோடு மட்டுமின்றி இடஒதுக்கீட்டையும் இல்லாமல் செய்து விடுவார்கள்’ என அகிலேஷ் யாதவ் கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் சமாஜ்வாடி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்றைய பிரசாரத்தில் பேசியதாவது: அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், பாஜ இம்முறை 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.
அவர்கள் அரசியல் சாசனத்தை மட்டும் மாற்ற மாட்டார்கள், இடஒதுக்கீட்டையும் இல்லாமல் செய்து விடுவார்கள். உங்கள் வாக்களிக்கும் உரிமையையும் பறித்து விடுவார்கள். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஏவி கார்ப்பரேட் நிறுவனங்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து ரூ.400 கோடி, ரூ.600 கோடி, ரூ.1000 கோடி என தேர்தல் பத்திரம் மூலம் பாஜ நன்கொடையை வழிப்பறி செய்துள்ளது.
தனக்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்களின் ரூ.15 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பாஜ அரசால் விவசாயிகளின் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய முடியவில்லை. கடந்த 10 ஆண்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பாஜ அரசு எந்த உதவியும் செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.