பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவதை டி.கே.சிவகுமார் உறுதிசெய்தார். தான் துணை முதல்வர் பொறுப்பேற்கவுள்ளதையும் டி.கே.சிவகுமார் உறுதி செய்தார். சித்தராமையா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இந்தியா டுடே ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், யார் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் நலன் கருதி சித்தராமையா முதல்வராவதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பினார்.
கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் முதலமைச்சர் குறித்து முடிவு செய்வார்கள் என்றார். கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், முடிவு ஏற்பட்டதை டி.கே.சிவக்குமாரின் கருத்து உறுதிப்படுத்தியது. இதனிடையே, வரும் 20ம் தேதி நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், மநீம தலைவர் கமல் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.