Thursday, May 16, 2024
Home » வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி

by Porselvi

டெல்லி : இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ” இந்தியாவில் ஜனநாயகம் எங்கே உள்ளது?.இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக அரசு அழித்துவிட்டது. நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் திட்டமிட்டு முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

ஒரு குடும்பத்தின் நிதி ஆதாரம் அனைத்தும் முடக்கப்பட்டால் அந்த குடும்பம் எப்படி பசியால் வாடுமோ அதுபோல் காங்கிரஸ் கட்சி உள்ளது. ரூ.14 லட்சம் வருமான வரி பிரச்சனைக்காக காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிதி ஆதாரம் முடக்கப்பட்ட பிரச்சனையில் தேர்தல் ஆணையமோ, நீதிமன்றங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒட்டுமொத்த நிதி ஆதாரமும் முடக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினரால் பேருந்து, ரயில்களில் பயணிக்க கூட முடியவில்லை. 30 ஆண்டுகளுக்கு முந்தைய வரி பிரச்சனைக்காக கடந்த 14-ம் தேதி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன் பிரதான எதிர்க்கட்சியை முடக்குவது எந்த வகையில் ஜனநாயகம்?. வேட்பாளர்களுக்கு செலவு செய்ய முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்கவும், விளம்பரம் செய்யவும் கூட எங்களிடம் பணம் இல்லை. 20% வாக்கு வங்கியை வைத்துள்ள காங்கிரஸால் வெறும் ரூ.2 கூட செலவு செய்ய முடியவில்லை. பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை ஒடுக்க நினைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து கேள்வி கேட்க வேண்டியது நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் கடமை ஆகும்,”இவ்வாறு தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi