டெல்லி: மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி சதி என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது; காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கப்படுகிறது. மக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதியை முடக்கியது ஜனநாயக விரோத செயல். மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியை முடக்க பிரதமர் மோடி சதி செய்து வருகிறார்.
பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கப்படுகிறது. எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டு, பலவந்தமாக பணம் பறிக்கப்படுகிறது. இருப்பினும், மிகவும் சவாலான சூழ்நிலையிலும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை திறம்பட தக்கவைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஒருபுறம், தேர்தல் பத்திர விவகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.