பொன்னேரி: மீஞ்சூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கி பழிவாங்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அண்மையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கி இருந்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஒன்றிய பாஜ அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் தலைமையில் அக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையாக வருமான வரித்தறையின் மூலம் ஒன்றிய பாசிச பாஜ அரசு இதுபோன்ற செயல்களை செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
அமலாக்கத்தறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை ஏஜென்சிகளை கொண்டு எதிர்கட்சிகளை முடக்க முயற்சிப்பதற்கு கண்டிக்கிறோம் என கண்டனம் தெரிவித்தனர். நகரத் தலைவர் அரவிந்த் ஏற்பாட்டில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ஜலந்தர், நந்தகுமார், மாவட்ட செயலாளர்கள் கிருபாகரன், அன்பரசு, சுகுமார், சுரேஷ், சிலம்பரசன், மீஞ்சூர் வட்டாரத் தலைவர்கள் அத்திப்பட்டு புருஷோத்தமன், பழவேற்காடு ஜெயசீலன், திருப்பாலைவனம்வினோத், குணசீலன், பாபு, காமேஷ், மயிலன், கண்ணாடி கடை ராஜேந்திரன், கொண்டக்கரை ஜெயபிரகாஷ், கும்மிடிப்பூண்டி பிரேம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கலந்து கொண்டனர்.