சென்னை: தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் முதல்வரின் அறிவிப்புக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்துள்ளத்து. தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து முதல்வர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை; விளிம்பு மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், சுதந்திர வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சிறை சென்றவருமான தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் நீண்டநாள் கோரிக்கையை அவரின் நினைவு தினமான இன்று (11.09.2023) அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இதன் மூலம் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்கு போராடிய தன்னலமற்ற தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் அளித்துள்ளது வரவேற்கதக்க, பாராட்டத்தக்க அறிவிப்பாகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.