புதுடெல்லி: சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த 3 தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த எம்எல்ஏ விக்ரம்ஜித் சிங் சவுத்ரி, அவருடைய தாயார் கரம்ஜித் கவுர் சவுத்ரி ஆகியோரை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்தது. கரம்ஜித் கவுர் சமீபத்தில் பாஜவில் சேர்ந்தார். அதே போல் இமாச்சல் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான தேஜிந்தர் சிங் பிட்டுவும் பாஜ கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், இந்த 3 பிரமுகர்களுக்கும் விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பதற்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ஒன்றிய ரிசர்வ் போலீசார் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.