புதுடெல்லி: சமணத் துறவி சிரோமணி வித்யாசாகர்ஜி மகாராஜ் காலமானதற்கு அஞ்சலி செலுத்தி பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ,அண்மையில் சமாதி அடைந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டிய அவரது இழப்பை மிக பெரிய இழப்பாக நான் உணர்கிறேன். பூஜ்ய ஆச்சார்ய ஜி, ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் சமண சமூகத்தில் உயர்ந்து நின்றார். ஆனால் அவரது தாக்கமும் செல்வாக்கும் ஒரு சமூகத்திற்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. பல்வேறு நம்பிக்கைகள், பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து பலதரப்பட்ட மக்களும் அவரிடம் வந்தனர்.
கல்வி அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு பகுதியாக இருந்தது. அதே நேரத்தில், புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, நமது கலாச்சார நெறிமுறைகளில் வேரூன்றிய கல்வியை நமது இளைஞர்கள் பெற வேண்டும் என்று விரும்பினார். அவர் தேச நிர்மாணத்தில் கொண்டிருந்த உறுதிப்பாடு குறித்து, எதிர் கால தலைமுறையினர் விரிவாக படிக்க வேண்டும் . எந்தவொரு பாகுபாட்டையும் கைவிட்டு தேச நலனில் கவனம் செலுத்துமாறு அவர் எப்போதும் மக்களை வலியுறுத்தி வந்தார். இயற்கைக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்கும் ஒரு வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று பூஜ்ய ஆச்சார்ய ஜி அழைப்பு விடுத்தார். அதேபோல், நமது பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த அவர், விவசாயத்தை நவீனமாகவும், நிலையானதாகவும் மாற்றவேண்டும் என வலியுறுத்தினார். நாம் ஒரு மகத்தான ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம். அதோடு மட்டுமல்லாமல், நமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவரது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.