பெரம்பூர்: ஆந்திராவில் இருந்து பேருந்தில் சென்னைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கொளத்தூர் ரெட்டேரி சிக்னல் பகுதியில் அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர், சப் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் வந்து இறங்கிய ஒரு வாலிபர், போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து, அவரிடம் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். இதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் (29) என்பதும், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி ெசன்னை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.