சென்னை: திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கண்ணும் கண்ணும், புலிவால் பட இயக்குநர், பிரபல நடிகர் மாரிமுத்து மறைந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து வந்து 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராக பாராட்டப்பட்டவர் மாரிமுத்து. சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராக புகழ்பெற்றார் மாரிமுத்து.
பல நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடம் சேர்க்கும் வகையில் அமைந்தன. மாரிமுத்து மறைவு தமிழ் திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். மாரிமுத்துவை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதேபோல் நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். மாரிமுத்துவை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாரடைப்பால் காலமானார் இயக்குநர் மாரிமுத்து என்பதை அறிந்து மிகுந்த வேதனைப்படுகிறேன் என வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். மாரிமுத்துவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வி.சி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.