புதுடெல்லி: டெல்லியில் ஜி-20 மாநாடு நடக்கும் பகுதியில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரகாண்ட்டின் சில பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மீண்டும் பருவ மழை தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும். கிழக்குப் பகுதி மாநிலங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நாடு முழுவதும் இன்று 19 மாநிலங்களில் கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களில் அதாவது 9, 10 ஆகிய தேதிகளில் 14 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில், மாநாடு நடைபெறும் இடமான பாரத மண்டபத்தை சுற்றிலும் நாளையும், நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அடுத்தடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.