திருவொற்றியூர்: கச்சா எண்ணெய் கழிவுகள் மழை நீரில் கலந்து ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசின் சிபிசிஎல் நிறுவனம் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மணலி சிபிசிஎல் நிறுவன வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை வகித்தார். இதில் ஏராளமான தொண்டர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘‘பேரழிவுக்கு முழு பொறுப்பேற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்னைகள் மீது விரிவான ஆய்வு செய்து நீண்டகால விளைவுகளை கணக்கில் கொண்டு சுகாதார கண்காணிப்பு, பொருளாதார ரீதியான இழப்பீட்டை வழங்கிட வேண்டும். நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாசடைந்த தண்ணீரை சீர்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். கொசஸ்தலை ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகளை சீர்படுத்தி, தடுப்புச் சுவர்கள் உடனடியாக அமைக்கவேண்டும்,’’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.