சென்னை: நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மூலம் பால், நெய், வெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மலிவான விலையில் குடிநீர் பாட்டில்கள் இரு மாதங்களுக்குள் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆவின் நிறுவனம் பால், பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து குடிநீர் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆவின் தண்ணீர் பாட்டில்கள் சந்தை விலையை விட குறைவான விலைக்கு விற்கப்பட உள்ளது. ஆனால் விலைப்பட்டியல் தற்போது வரை தயாராகவில்லை. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தபுள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 1000, 500 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில்களை விற்கப்படும் நிலையில், இந்த குடிநீர் பாட்டில்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்பட உள்ளது.
அதேபோல் ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் அம்மா மினரல் வாட்டர் என்ற பெயரில் ஒரு லிட்டர் ரூ.10க்கு குடிநீர் விற்கப்பட்டது. பின்னர் இத்திட்டம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி கூறுகையில், ‘‘பால் பாக்கெட்டுகள் விலையை உயர்த்தாமல் ஆவினில் வருமானத்தை பெருக்குவதற்காக ஆவின் குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதன்படி பெட் பாட்டில்கள் 500 மி.லி மற்றும் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட உள்ளது. அனைத்து ஆவின் கடைகள், பேருந்து நிலையங்களில் இந்த குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட உள்ளது’’ என்றார்.