Saturday, May 4, 2024
Home » வண்ண மலர்களைக் காண கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்: மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு

வண்ண மலர்களைக் காண கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்: மலர் கண்காட்சி மேலும் 2 நாள் நீட்டிப்பு

by Suresh

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா வெகு சிறப்பாக நடத்தப்படும். கடந்த ஆண்டு மலர் கண்காட்சி 5 நாள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 3 நாள் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த மே 26ம் தேதி 60வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா துவங்கியது. தமிழ்நாடு அமைச்சர்கள் மலர் கண்காட்சி, கோடை விழா நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தனர். மலர் கண்காட்சியில் 34 வகையான ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான பல வண்ண மலர்கள் இடம் பெற்றுள்ளன.

பல வண்ண மலர்களை கொண்டு ஒட்டகச்சிவிங்கி, வாத்து, டெடி பியர், டோனி டீசர்ட் உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறிகளில் காட்டு மாடு, வரிக்குதிரை, மயில், அணில் போன்ற உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. விடுமுறை தினமான நேற்றும் மலர் கண்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மலர் கண்காட்சியைக் காண சுற்றுலாப்பயணிகள் வெகு ஆர்வமாக கொடைக்கானல் படையெடுக்கின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்றுடன் நிறைவடைய இருந்த மலர் கண்காட்சி நாளை (மே 30) வரை மேலும் 2 நாள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவலை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார். மலர் கண்காட்சி நீட்டிப்பிற்கு சுற்றுலாப் பயணிகளும், சுற்றுலா தொழில் புரிவோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கோடை விழா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகளுடன் வரும் ஜூன் 2ம் தேதி வரை நடக்கிறது.
மூன்று நாட்களில்

ரூ.10.50 லட்சம் வசூல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி, கோடை நிகழ்ச்சிகளை காண கடந்த 3 நாட்களில் சுமார் 40 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர். இவர்களிடமிருந்து கட்டணமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மலர் கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். இத்தகவலை பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

3 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi