மதுரை, ஏப். 22: சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரியின் ‘கூண்டுக்குள் வானம்’ என்ற சிறை நூலக திட்டத்திற்கு பொதுமக்களின் பங்களிப்புடன், சிறைவாசிகளின் நூலக பயன்பாட்டிற்காக நூல்கள் திரட்டப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை தனியார் கல்லூரி சார்பாக மாணவர்கள் ஒன்றிணைந்து திரட்டிய 1000 நூல்கள் சிறைவாசிகளின் நூலக திட்டத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பரசுராமன் ஆகியோரிடம் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் மற்றும் விரிவுரையாளர் குருமூர்த்தி, மாணவர்கள் அஜித், அருண்குமார் ஆகியோர் வழங்கினர். சிறைவாசிகளின் பயன்பாட்டிற்கான பொதுமக்கள் நூல் வழங்கும் இந்த திட்டம் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது.