கோவை, ஏப். 22: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த பகுதியாக உள்ளது. இம்மண்டலத்தின் கீழ், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கோவை அரசு மருத்துவமனை, கோவை ரயில் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், ரேஸ்கோர்ஸ் அரசு அலுவலர்கள் குடியிருப்பு, ஒன்றிய அரசின் வருமான வரித்துறை மண்டல அலுவலகம், கோவை அரசு கலைக்கல்லூரி என முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள் உள்ளன.
இம்மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 வார்டுகளில் அன்றாடம் குப்பைகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. அன்றாடம் சேரும் குப்பைகளை அகற்ற, போதிய வாகன வசதி இல்லை. பணியாளர்களும் தேவையான அளவு இல்லை. இதையடுத்து, வாகன வசதி மற்றும் பணியாளர்கள் வசதி கேட்டு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோரிடம், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று ரூ.10 லட்சம் மதிப்பில், 44 தள்ளுவண்டிகள் மற்றும் 176 பிளாஸ்டிக் குப்பை பெட்டிகள் மத்திய மண்டலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இவற்றை, ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் ஆகியோர் இந்த தள்ளுவண்டி மற்றும் குப்பை தொட்டிகளை, மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் புவனேஸ்வரி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.