நாகர்கோவில்: சென்னை கிண்டி அருகே புத்தக்கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெமிலா. இவரது மகள் ஆணி (21). மகன்கள் ஐரின் (19), ஜெனில் (19), இரட்டையர்கள். ஜெமிலா கணவரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே படந்தாலுமூடு நெய்யங்காடு ஆலமூடு பகுதி ஆகும். தற்போது ஜெமிலாவின் கணவர் இல்லை. இதனால் தனது பிள்ளைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். ஆனால் படிப்பு காரணத்துக்காக மகள் ஆணி, மகன்கள் ஐரின், ஜெனில் ஆகியோர் மட்டும் மார்த்தாண்டத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். தாயார் ஜெமிலா சென்னையிலேயே உள்ளார்.
ஆணி உள்பட 3 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதில் ஆணி பிஏ தமிழ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 25ம்தேதி ஆணி உள்பட 3 பேரும் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றனர். கல்லூரி முடிந்ததும் மாலையில் ஐரின், ஜெனில் ஆகியோர் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் ஆணி வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர்கள் உடனே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி ஆணியை தேடி வருகின்றனர்.