கூடுவாஞ்சேரி: வேங்கடமங்கலம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வேங்கடமங்கலம் மற்றும் நெடுங்குன்றம் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், வேங்கடமங்கலம் ஊராட்சியில் உள்ள குப்பை கிடங்கினை அப்புறப்படுத்தி அதில் சிறுவர் பூங்கா, வனம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள நேரில் சென்று நேற்று மதியம் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கத்தில் உள்ள ஓட்டேரி ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணி மற்றும் பூங்கா அமைக்கப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கடமங்கலம் கல்யாணிரவி, நெடுங்குன்றம் வனிதாஸ்ரீசீனிவாசன் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.