கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று மதியம் திடீரென வந்து ஆய்வு செய்தார். இதில், ஆப்ரேஷன் தியேட்டர், பிரசவ வார்டு, டெலிவரி அறை உள்ளிட்ட பல்வேறு அறைகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். பின்னர், பிரசவ வார்டில் இருந்த குழந்தை பெற்ற தாய்மார்களிடமும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
இதனை அடுத்து, அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்னும் என்னென்ன வசதிகள் தேவை என்றும் கேட்டறிந்தார். அப்போது, காய்ச்சலுக்கு என்று தனி வார்டு, புதிய புற நோயாளிகள் பிரிவு ஆகியவை தேவை என்று கூறினார். இதனை உடனடியாக செய்து தருவதாக மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உறுதி அளித்தார்.
அப்போது அவருடன் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பரணிதரன், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.