கோவை: பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது தொடர்பாக 3 பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் கடந்த 18ம் தேதி பிரதமர் மோடியின் வாகனப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஸ்ரீ சாய்பாபா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சீருடையில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தேர்தல் ஆணைய விதிகள் மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரான என புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி, விசாரணை நடத்த உத்தரவிட்டார். பள்ளி குழந்தைகளை வாகன பேரணிக்கு அழைத்து சென்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தது குறித்து பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கே நேரில் சென்று விசாரணையும் நடத்தினர்.
இந்நிலையில், சின்மயா மெட்ரிக் பள்ளி, வடவள்ளி சின்மயா சி.பி.எஸ்.இ பள்ளி, ஆர்.எஸ்.புரம் சின்மயா பள்ளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பள்ளிகளை சேர்ந்த 22 மாணவர்களை அழைத்து வந்து மோடி பேரணியில் பங்கேற்க வைத்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து 3 பள்ளிகள் மீதும் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் அலுவலர் புகாரின் பேரில் 3 பள்ளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.