Thursday, May 16, 2024
Home » கோவை அருகே பரபரப்பு ஒன்றரை வயது பெண் குழந்தை சாவில் மர்மம்

கோவை அருகே பரபரப்பு ஒன்றரை வயது பெண் குழந்தை சாவில் மர்மம்

by Lakshmipathi

*தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுப்பு

மதுக்கரை : கோவை அருகே ஒன்றரை வயது பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்ததால் மதுக்கரை தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.கோவையை அடுத்த க.க.சாவடி நேதாஜிபுரம் பகுதியில் வசித்து வருபவர் லூர்து ராஜ். இவர் எட்டிமடை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ரஞ்சிதம் என்கிற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும், ஒன்றரை வயதில் தன்விகா என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி இவரது மனைவி ரஞ்சிதம், தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தொண்டாமுத்தூர் அருகிலுள்ள களிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்தபோது கடந்த 17-ம் தேதி குழந்தை தன்விகாவிற்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி ரஞ்சிதம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் இந்த தகவலை அங்கிருந்தபடி, தனது கணவர் தூர்துராஜிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அன்று இரவு உடல் நலக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி மனைவி ரஞ்சிதம், அவரது தாய் முருக்கம்மாள் மற்றும் அவரது தம்பி ஆகியோர் குழந்தையின் உடலை லூர்து ராஜின் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் குழந்தையின் உடல் க.க.சாவடி நேதாஜி நகர் பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது குழந்தை தன்வியா மரணத்தில் தனது மனைவி ரஞ்சிதம் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும், அதனால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று லூர்து ராஜ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி நேற்று க.க.சாவடி நேதாஜி புரத்தில் உள்ள மயானத்தில் குழந்தையின் உடலை மதுக்கரை தாசில்தார் ராஜேஸ்குமார் முன்னிலையில் தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்தனர். இதில், முதற்கட்ட ஆய்வில் குழந்தையின் உடலில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் காயங்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்கூறு ஆய்வுக்காக க.க.சாவடி மயானத்தில் தற்காலிக டெண்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

13 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi