பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கர்நாடக மாநில தலைவர் பதவியிலிருந்து சி.எம்.இப்ராஹிமை நீக்கிவிட்டு, புதிய மாநில தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், மஜத கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்தது. இதில் உடன்பாடில்லாத கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம், கடந்த 16ம் தேதி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். மேலும் மஜத கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் அவரது மகன் நிகல் கவுடா நீக்கப்பட்டுள்ளதாக, இப்ராஹிம் கையெழுத்திட்ட கடிதம் வைரலாகி பரவியது. இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மஜத தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா, மஜத கட்சி மாநில தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிம் நீக்கப்படுகிறார். கட்சியின் புதிய மாநில தலைவராக எச்.டி.குமாரசாமியை நியமிக்கிறேன். கேரளாவில் மஜத எம்.எல்.ஏ ஒருவர் அமைச்சராக இருக்கிறார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருக்கும் மஜத நிர்வாகிகளும் பாஜவுடனான கூட்டணியை ஆதரிக்கின்றனர் என்றார்.