மதுரை: தற்போது எனக்கு 69 வயதாகிறது; ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன் என சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது;
இந்தியா வல்லரசு நாடாக உருவாகுவதை தடுக்க வெளிநாட்டு சதியாக மது ஊடுருவி உள்ளது. 2025ல் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா திகழும். பிற நாடுகளை காட்டிலும் அதிக மனித வளம் கொண்டது. ஆனால் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர். பள்ளி சிறுவர்களும் போதைக்கு அடிமையாகி விட்டனர். அதற்கு காரணம் மது. மதுபான கடைகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதன் மூலம் மதுவிலக்கு அமல்படுத்த முடியும்.
தற்போது எனக்கு 69 வயதாகிறது; ஆனால், 25 வயது இளைஞனைப் போல இருக்கிறேன்; 150 ஆண்டுகள் வரை, நான் உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். 2026ம் ஆண்டு என்னை முதலமைச்சர் ஆக்கினால், அந்த வித்தை என்னவென்று உங்களுக்கு சொல்கிறேன் எனவும் கூறினார். மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக மாதந்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும்.