மாமல்லபுரம்: மாமல்லபுரம் பழைய அர்ஜூனன் தபசு மீது படிந்துள்ள உப்பு படிமங்களை ரசாயனம் கலந்த நீரால் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. இங்குள்ள, புராதன சின்னங்கள் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பராம்பரிய நினைவு சின்னங்களாகவும், வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இங்கு, பல்லவ மன்னர்களின் கை வண்ணத்தில் செதுக்கிய புராதன சின்னங்கள் இன்றளவும் கம்பீரமாக நின்று காட்சி தருகிறது.
மாமல்லபுரம் என்றாலே நினைவுக்கு வருவது கற்சிற்பங்களும், புராதன சின்னங்களும் தான். மேலும், இங்குள்ள சிற்பங்கள் உப்புக் காற்றினாலும், அதிகபடியான வாகனங்களில் இருந்து வெளியேறும் கரும்புகையாலும் தொடர்ந்து சிதிலமடைந்து வருகிறது. மேலும், பாதிப்பை தடுக்க ஒன்றிய தொல்லியல் துறை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனம் கலந்த நீர் மூலம் உப்பு படிமங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பழைய அர்ஜூனன் தபசு சிற்பம் மீது படிந்துள்ள உப்பு படிமங்களை தொல்லியல் துறையின் வேதியியல் பிரிவு வல்லுநர்கள் ராசயனம் கலந்த நீரால் அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.