சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கிளாம்பாக்கத்தில் புதிதாக பஸ் முனையம் திறக்கப்பட்டு உள்ளது. தென்மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகையின்போது அரசு விரைவு பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு விரைவு பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் இதுவரை ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருகிற 25, 26 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாமல் தவிர்க்க ஆம்னி பேருந்துகளை நாளை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது; கிளம்பாக்கத்தில் இருந்து அரசு பேருந்துகள் செல்லும் போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்துதான் இயக்குவது சரியாக இருக்கும். ஆம்னி பேருந்துகள் வேறு இடத்தில் இருந்து இயங்கினால் போட்டி ஏற்படும் சூழல் நிலவும். கிளாம்பாக்கத்தில் இருந்து விரைவில் ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் கூறினார்.