ஆவடி: அயப்பாக்கத்தில் மின் கம்பம் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து ‘டன்லப்’ வழியாக அய்யபாக்கத்திற்கு தடம் எண் (73) மாநகரப் பேருந்து, 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து, அயப்பாக்கம், ‘நேவி’ குடியிருப்பு அருகே செல்லும் போது, எதிரே வந்த லாரிக்கு வழிவிட்டு ஒதுங்கும் போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் சிக்கி, மின் கம்பம் மீது மோதி நின்றது.
இதனால், அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பம் மீது மோதியதில், பேருந்தின் மீது தீப்பொறி சிதறியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள், பேருந்தை விட்டு அலறி அடித்து இறங்கி ஓடினர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி, கிரேனை வரவழைத்து பேருந்தை மீட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள், மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.