பொன்னேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், 3ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு கிடப்பில் உள்ள பணப்பலன்களை வழங்கிட வேண்டும்,
மின்வாரியத்தில் காலியாக உள்ள 56,000 காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தொழிலாளர்களின் பணி நேரத்தை 8மணியில் இருந்து 12மணி நேரமாக உயர்த்த தமிழ்நாடு அரசு வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.