Friday, May 17, 2024
Home » சிடி மணி, காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி மயிலாப்பூர் பிரபல ரவுடி டொக்கன் ராஜா படுகொலை: ஓட ஓட விரட்டி வெட்டிய 8 பேர் கும்பல்

சிடி மணி, காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி மயிலாப்பூர் பிரபல ரவுடி டொக்கன் ராஜா படுகொலை: ஓட ஓட விரட்டி வெட்டிய 8 பேர் கும்பல்

by Ranjith

சென்னை: மயிலாப்பூர் பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை மர்ம கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகர் பகுதியே சேர்ந்தவர் ராஜா(எ) டொக்கன் ராஜா(46). பிரபல ரவுடியான இவர், தென்சென்னை தாதா சிடி மணியின் மற்றும் வடசென்னை ரவுடி காக்காதோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி. டொக்கன் ராஜா மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. துரைப்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி டொக்கன் ராஜாவை வழக்கு ஒன்றுக்காக, கடந்த ஆண்டு டிசம்பர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த டொக்கன் ராஜா, தனது ஏரியாவில் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தான். இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லக்கு மா நகரில் நடந்த பிரச்னை ஒன்றில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனால் எதிர்தரப்புக்கும் ரவுடி டொக்கன் ராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், சாந்தோம் ெநடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு டொக்கன் ராஜாவின் உறவினர் வீட்டு திருமணத்துக்காக அவரது வீட்டில் உள்ளவர்கள் சென்று விட்டனர். அவர்கள் கிளம்பி சென்ற பிறகு டொக்கன் ராஜாவும் திருமணத்துக்கு புறப்பட வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த 8 பேர் கும்பல் ஒன்று, மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து ரவுடி டொக்கன் ராஜாவை எந்த வழியிலும் தப்ப முடியாதபடி, அரிவாளால் சுற்றி வளைத்து வெட்டினர். இதில் வாலி தாங்க முடியாத டொக்கன் ராஜா தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள அலறிக் கொண்டே சத்தமிட்டபடியே ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் ரவுடி டொக்கன் ராஜாவை தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர், மர்ம கும்பல் அங்கிருந்து வாகனங்களில் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடி டொக்கன் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரவுடி டொக்கன் ராஜா படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல்லாக்குமா மாநகரில் ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மயிலாப்பூர் உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

* போலீசுக்கு பயந்து பாஜவில் இணைந்தவர்
டொக்கன் ராஜா மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. தான் திருந்தி வாழ்வதாக மயிலாப்பூர் துணை கமிஷனர் முன்பு பிணை பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அதை மீறி குற்றங்களில் ஈடுபட்டதால் போலீசார் கைது செய்தனர். போலீசிடம் இருந்து தப்பிக்க சில மாதங்களுக்கு முன்பு பாஜவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த நில நாட்களிலேயே ரவுடி டொக்கன் ராஜாவுக்கு மாவட்ட இளைஞர் அணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டது. பாஜவில் இணைந்ததால் தனது பதவியை பயன்படுத்தி மீண்டும் அவரது ஏரியாவில் எதிர் தரப்பினரை டொக்கன் ராஜா மிரட்டியும் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

அந்த வகையில் தான் கடந்த ஆண்டு மயிலாப்பூர் பகுதியில் உருளை கோபியை கொலை செய்த ரவுடி கிழக்கு சரவணனுடன் அடிக்கடி டொக்கன் ராஜா மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த வாரம் வழக்கு ஒன்றில் ரவுடி கிழக்கு சரவணனை போலீசார் கைது செய்தனர். இதற்கு டொக்கன் ராஜா தான் காரணம் என்று கிழக்கு சரவணனின் ஆதரவாளர்கள் கருதியதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படுகொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

ten − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi