சென்னை: சென்னை விமான நிலையத்தில் அரியானா செல்ல வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியானா மாநிலம் சண்டிகரைச் சேர்ந்தவர் ரோதாஸ் குமார் (52), மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவர், தமிழ்நாட்டில் நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரோதாஸ் குமார் விடுப்பு எடுத்துக்கொண்டு, சொந்த ஊருக்கு சிகிச்சைக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி வழியாக அரியானா மாநிலம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு போர்டிங் பாஸ் வாங்கி விட்டு, பாதுகாப்பு சோதனை பகுதிக்கு செல்ல முயன்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், சக பயணிகள், ரோதாஸ் குமாரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரோதாஸ் குமார் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் ரோதாஸ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோதாஸ் குமார் உடலை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.