புதுடெல்லி: இயேசு கிறிஸ்து பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தன் டிவிட்டர் பதிவில், “அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள். இந்த கிறிஸ்துமஸ் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பை கொண்டு வரட்டும்” என்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தன் இல்லத்தில் கிறிஸ்துவ சமுதாய மக்களை சந்தித்து உரையாடிய பிரதமர் மோடி, அச்சமுதாய மக்களுடனான தன் பழைய நெருக்கமான, அன்பான உறவுகளை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து அவர்களிடையே பேசிய அவர், “ஏழைகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதில் கிறிஸ்துவ மக்கள் எப்போதும் முன்னிலையில் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துவ மக்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் சுகாதாரம், கல்வி துறைகளில் பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றன. இயேசு கிறிஸ்து அனைவருக்கும் நீதி கிடைக்க கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய மக்களுக்காக பணியாற்றினார். இயேசுவின் செய்தி இரக்கம், சேவையை மையமாக கொண்டது. இந்த விழுமியங்கள் பாஜ அரசின் வளர்ச்சி பாதையில் வழிகாட்டும் ஔியாக உள்ளது. பைபிள் போன்றவற்றின் உன்னதமான நூலின் உண்மையை உணர்ந்து கொள்வதிலும் உபநிடதங்கள் கவனம் செலுத்தின” என்றார்.