அண்ணாநகர்: கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் விடுத்த பாஜ பிரமுகர் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது, பாஜவை சேர்ந்த சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த யோவான் (29) என்பவர் நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு கடந்த 28ம் தேதி நெற்குன்றம் பகுதியில் ஊழியம் செய்வதற்கு சென்றோம். அப்போது எங்களது வாகனத்தை வழிமறித்த பாஜ பிரமுகர் பிச்சாண்டி (எ) ஜென்டில்மேன் மற்றும் சிலர் எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர். மதக்கலவரம் தூண்டும் வகையில் எங்களை மிரட்டினர். எங்களை மிரட்டும் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். எனவே கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜ பிரமுகர் மீது காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் பாஜ பிரமுகர் மீது புகார்
previous post