Sunday, May 19, 2024
Home » நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் லீசுக்கு குடியிருப்பவர் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்த நடன இயக்குனர்: தேனாம்பேட்டையில் பரபரப்பு

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் லீசுக்கு குடியிருப்பவர் வீட்டை பூட்டி வெல்டிங் வைத்த நடன இயக்குனர்: தேனாம்பேட்டையில் பரபரப்பு

by Ranjith

சென்னை: தி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மேலாளராக பணிபுரிபவர் விக்னேஷ். இவர், கடந்த 2021ம் ஆண்டு தேனாம்பேட்டை ஜெயம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பிரபல நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் இளைய சகோதரர் நாகேந்திர பிரசாத் என்பவருக்கு சொந்தமான வீடு வாடைக்கு விடப்படும் என்று பலகை வைத்திருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் நாகேந்திர பிரசாத்திற்கு விக்னேஷ் போன் செய்தபோது, அவரது மனைவி ஹேமா பிரசாத், ‘‘எங்களது வீட்டை எஸ்.டி.எஸ்.கே. பிராபர்ட்டி டெக் என்ற நிறுவனத்திடம் பராமரிப்புகாக விட்டுள்ளோம்.

நீங்கள், வீடு லீசுக்கான ரூ.25 லட்சத்தை அந்த நிறுவனத்திடம் கொடுத்து விட்டு, பின்னர் குடித்தனம் வரலாம்,’’ என்று கூறியதாக தெரிகிறது. அதன்படி விக்னேஷ், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ரூ.25 லட்சத்தை கொடுத்து, ஆவணங்களில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளார். பின்னர், கடந்த ஓராண்டுக்கு மேலாக விக்னேஷ் தனது மனைவி தாரணி மற்றும் 2 குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையே லீசுக்கு விட்ட தனியார் நிறுவனம், நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத்திற்கு மாதம் ரூ.36 ஆயிரம் வாடகை என்று ஒரு வருடத்திற்கு பணத்தை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த நிறுவனம் நடன இயக்குநருக்கு வாடகை பணம் கொடுக்கவில்லை. மேலும், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதற்கிடையே வீட்டிற்கான வாடகை பணம் வராததால், நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத், இதுபற்றி விக்ேனஷிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் ரூ.25 லட்சம் கொடுத்து வீட்டை லீசுக்கு எடுத்து தான் குடியிருந்து வருகிறேன், என்று கூறியுள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, விக்னேஷ் குத்தகை ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நாகேந்திர பிரசாத் நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு, யாரும் இல்லாததால், கேட் கதவை வெளிப்பக்கம் பூட்டி, வெல்டிங் வைத்துவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குழந்தைகளுடன் வீட்டிற்கு வந்த தாரணி, கேட் வெல்டிங் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்படி தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வீட்டிற்குள் சிக்கிய நாய் குட்டியை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தேனாம்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

three − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi