பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரமுள்ளதாகும். ஆபத்தான பள்ளத்தாக்குகளும், பல ஆபத்தான வளைவுகளும் நிறைந்த இந்த மலைச்சாலையின் அடிவார பகுதிகளில் உள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், வியாபாரிகள் தினமும் டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்கின்றனர். மேலும் மலைத்தோட்டங்களில் விளைந்த காபி, மிளகு, சவ்சவ், மலைவாழை போன்றவற்றை வத்தலக்குண்டு, திண்டுக்கல் பகுதிகளுக்கு கொண்டு செல்ல சரக்கு வாகனங்களில் வருகின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த மலைச்சாலையின் இருபுறமும் முட்செடிகள் புதர்போல் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவை டூவீலர்களில் செல்பவர்களை காயப்படுத்தி வருகின்றன. மேலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் வளர்ந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே நெடுஞ்சாலை துறையினர் விபத்து ஏற்படுத்தும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.