சென்னை: சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி வரும் 19ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19ம் தேதி முதல் பொது பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.