இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பலுசிஸ்தான் போராளிகள், தற்போது பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான தளம் பலுசிஸ்தானின் துர்பத்தில் அமைந்துள்ளது. அந்த விமான தளத்தின் மீது தடைசெய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற அமைப்பு தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுகுறித்து ‘பலுசிஸ்தான் போஸ்ட்’ வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘பிஎல்ஏ போராளிகளின் மஜீத் பிரிவானது, துர்பத்தில் அமைந்துள்ள விமானப்படை தளத்திற்குள் திடீரென நுழைந்தது. அவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். ஆனால் அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. இந்த போராளிகள், பலுசிஸ்தான் மாகாணத்தில் சீன முதலீட்டை எதிர்த்து வருகின்றனர்.
தங்களது பகுதியை சீனாவும் பாகிஸ்தானும் சுரண்டுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். சீன ட்ரோன்கள் பாகிஸ்தான் ராணுவ தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த போராளிகள் விமான தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக தாக்குதல் நடத்தி உள்ளனர். ஏற்கனவே ஜனவரி 29, மார்ச் 20 ஆகிய தேதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவங்களில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் எட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்’ என்று கூறியுள்ளது.