சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு (அதிமுக) பேசுகையில், “தீப்பெட்டி தொழிலை பெரிதும் பாதித்துள்ள சீன பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்திய தீப்பெட்டி சந்தையில் சுமார் 20 சதவீதத்திற்கும் மேலாக சீன லைட்டர்கள் ஆக்கிரமித்துள்ளன. இதுதொடர்பாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு தடை விதித்திட வேண்டி 8.9.2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தீப்பெட்டிக்காக இறக்குமதி செய்யப்படும் மரக்கட்டைகள் புகையூட்டம் செய்யப்பட வேண்டும் என்ற பட்சத்தில் 5 மடங்கு கட்டணம் விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடர்ந்த வழக்கில், இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வாரத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆகவே, சீன நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களுக்கு தடைவிதிக்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.