மாமல்லபுரம்: மூங்கில் கூடையை தொப்பியாக மாட்டிக்கொண்டு குஜராத் பிரம்மச்சாரி புன்னிய தலங்களுக்கு சைக்கிள் பயணம் செய்து வருகிறர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியை சேர்ந்தவர் ரசீக்போலா (65), வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். உயிரிழந்த தனது தாய், தந்தையை இன்றளவும் கடவுளாக வணங்கி, திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்கிறார். மேலும், தாய் – தந்தையின் நினைவாக நாடு முழுவதும் உள்ள புன்னிய தலங்களுக்கு சைக்கிளில் ஆன்மிக பயணம் செல்ல முடிவு எடுத்தார். இவர், கடந்த இரண்டரை மாதத்துக்கு முன்பு குஜராத் மாநிலம் துவாரகாதீசர் கோயிலில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார். பின்னர், ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில், உத்ரகாண்ட் மாநிலம் பத்ரிநாராயணன் மற்றும் கேதர்நாத் சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஈசிஆர் சாலை வழியாக ராமேஸ்வரம் புறப்பட்டார்.
ரசீக்போலா ஓய்வு எடுப்பதற்காக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இரவு தங்கினார். பல்வேறு மாநிலங்களை கடந்து புன்னிய தலங்களை சைக்கிள் பயணம் மூலம் பார்த்து வருகிறார். இறுதியில், தனது சைக்கிள் பயணத்தை தாய் – தந்தை நினைவாக குஜராத் மாநிலம் துவாரகா தீசர் பெருமாள் கோயிலில் நிறைவு செய்கிறார். குறிப்பாக, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும்நிலையில் தன் மீது வெயில் படாமல் இருக்க மூங்கில் கூடையை தலையில் தொப்பியாக அணிந்துக்கொண்டு, 65 வயதிலும் ஓர் இளைஞரைபோல் ரசீக்போலா சைக்கிள் பயணம் செய்து வருகிறார். சுமார், 4500 கி.மீ. தூரம் சைக்கிளில் பயணம் செய்வதாக அவர் பெருமையுடன் கூறினார்.