சென்னை: சீனாவில் பரவி வரும் புதிய வகை நிமோனியா காய்ச்சல், தமிழகத்தில் பரவவில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ,பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: சீனாவில் பரவி வரும் புதிய வகை நிமோனியா காய்ச்சல் தமிழகத்தில் பரவவில்லை. எனவே பயப்பட தேவை இல்லை. இருப்பினும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க எதுபோன்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த இருக்கிறோம் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.